நேற்று (20) நள்ளிரவு வரை அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்த நிலையில்,
தனியார் இறக்குமதியாளர்கள் 67,000 மெற்றிக் தொன் அரிசியை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை சுங்கத்துறை, இறக்குமதி வரியாக 4.3 பில்லியன் ரூபாய் அல்லது 430 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், சுங்கப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இந்த 67,000 மெற்றிக் தொன் அரிசியில், 28,500 மெற்றிக் தொன் பச்சரிசியும் 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குவதாகவும், ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாய் இறக்குமதி வரி அறவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அடுத்த வருடம் ஜனவரி 10ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுவதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, அரிசி இறக்குமதி தற்போது இடம்பெறுகிறதா என இலங்கை சுங்கத்திடம் வினவிய போது, “கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் வரை அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது” என சுங்கப் பணிப்பாளர் நாயகம் அருக்கொட தெரிவித்துள்ளார்.