பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன
நாணாயக்காரவின் பெயருக்கு முன்னால் “கலாநிதி” என்று எழுதப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வு திணைக்களம் பாராளுமன்ற அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று நேற்று (20) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்து, பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் உட்பட மூன்று அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற இணையத்தளத்தில் தனது பெயருக்கு முன்னால் இல்லாத ‘கலாநிதி” ஒருவரின் பெயரைத் தவறாக குறிப்பிட்டமை தொடர்பில், அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்கார, அண்மையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், பாராளுமன்ற அதிகாரிகள் குழுவிடம் நேற்று வாக்குமூலங்களைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.