முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் காணப்பட்ட மியன்மார் அகதிகள், இன்று (20) திருகோணமலைக்கு
அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட மியான்மர் பிரஜைகளை, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்புவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் பணியாற்றி வருவதாக, கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.
“இந்த படகில், 25 சிறு குழந்தைகள், 30 பெண்கள் உட்பட 102 பேர் உள்ளனர். இப்போது சுகாதார அதிகாரிகள் வந்து, அவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த நடவடிக்கைகளின் பின்னர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்” என்று, கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.
"இந்நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை"
இதேவேளை, இந்த அகதிகள் தொடர்பில் இந்த நாட்டின் சட்டம் மற்றும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மியான்மரில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக, இந்த அகதிகள் குழு 16 நாட்களுக்கு முன்பு 3 படகுகளை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
இருப்பினும், வழியில் 2 படகுகளில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால், அவற்றின் பணியாளர்களும் இந்த கப்பலில் ஏறியுள்ளனர்.
பயணத்தின் போது, நான்கு குழந்தைகள் உட்பட 6 பேர் சுகவீனம் மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (19) முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்த இந்தக் குழுவை, அப்பகுதி மீனவர்கள் பார்த்ததையடுத்து பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 102 பேர் கொண்ட மியன்மார் அகதிகள் மற்றும் படகுகளின் பணியாளர்கள் 12 பேர், இலங்கை கடற்படையினரின் தலையீட்டில் இன்று காலை திருகோணமலை அஷ்ரப் ஜெட்டிக்கு அழைத்து வரப்பட்டனர்.
சரியான உணவு மற்றும் பானங்கள் இல்லாததால், இந்த குழு பலவீனமான நிலையில் இருந்தது.
இதன்போது, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவும் சென்றிருந்தார்.
பின்னர், மியான்மார் அகதிகளின் உடல்நிலையை பரிசோதிக்க இலங்கை அதிகாரிகள் அந்த இடத்தில் நடமாடும் மருத்துவ முகாமை நிறுவினர்.
இதேவேளை, அகதிகள் மற்றும் கப்பலின் பணியாளர்கள் இன்று பிற்பகல் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.