(பாறுக் ஷிஹான்)
மாகாண சபையின் முழுமையான
அதிகாரங்கள் கிடைக்குமாயின் அது இப்பிராந்தியத்துக்கான ஒரு வரப்பிரசாதமாக நாங்கள் பார்க்கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார்.
மாகாண சபை முறைமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் மாகாண சபை அதிகாரங்கள் குறித்து அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பகுதியில் அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
இந்த மாகாண சபைகளானது மக்களுக்கான பணிகளை செய்வதற்கும் மக்களுக்கான வேலைத்திட்டங்களை இலகுபடுத்துவதற்கும் இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக வட -கிழக்கை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற தமிழ்- முஸ்லிம் மக்களுக்காக உருவாக்கப்பட்டவை
இந்த மாகாண சபை முறைமையினால் கடந்த காலங்களில் இரு மாகாணங்களை தவிர ஏனைய ஏழு மாகாணங்களை சேர்ந்த மக்கள்தான் பயனடைந்தார்கள் என்பதை நான் கூற விரும்புகிறேன்.
இதில் வட மாகாணம் கிழக்கு மாகாணம் என இரண்டு மாகாணங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். இதில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம், தமிழ், சிங்களவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு உரிய அதிகாரம் வழங்கப்படாமைதான் இம்மாகாணத்தில் எமது சமூகம் முழுமையான நன்மையைப் பெற்று கொள்ள முடியாதுள்ளது.
எனவே தான் இந்த மாகாண முறை என்பது ஒழிக்கப்பட வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு தற்போது உள்ள அரசாங்கத்தில் உள்ளவர்களால் பரவலாக பேசப்படும் விடயமாக உள்ளது. அத்துடன் இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு பின்னர் தான் இவ்விடயம் குறித்து பேச முடியும் என்ற மற்றும் ஒரு கருத்தும் இன்னொரு சாராரினால் வைக்கப்பட்டிருக்கின்ற கருத்துக்களாகும்.
ஆனால் மக்களுக்கான பணிகளை துரிதப்படுத்துகின்ற அத்துடன் அபிவிருத்தி சார் பணிகள் மக்களுக்காக சென்றடைய வேண்டும் என்பதுடன் வெளிநாட்டு நிதிகளை பெற்றுக் கொள்வதற்காகவும் மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த காலங்களில் நாங்கள் பல தடைகளை சந்தித்துள்ளோம். அதில் அதிகார ரீதியாகவும் அபிவிருத்திகளுக்கு நிதி வழங்குவது தொடர்பிலும் இங்கு முழுமையாக மறுக்கப்பட்டிருந்தது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் இவ்விரு மாகாணங்களிலும் மறுக்கப்பட்டிருந்தாலும் கூட ஏனைய ஏழு மாகாணங்களிலும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் மறுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுடைய கைகளில்தான் அந்த அதிகாரங்கள் இருந்தன.
இதனால் அந்த மாகாணங்களின் மக்கள் நன்மையடைந்தார்கள். அங்கு மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் ஒன்றாக பயணித்து பணிகளை செய்கின்ற முறைமையை நாங்கள் காண்கின்றோம் .
வடக்கு,மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் காணி, பொலிஸ் அதிகாரங்கள் சிறுபான்மை மக்களின் கைகளுக்கு சென்றால் இரண்டையும் தங்களுக்கு ஏற்றால் போல் பயன்படுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக அச்சட்டங்களை அமுல்படுத்துவதற்கு மத்திய அரசு மிக நீண்ட காலமாக தடைகளை அல்லது அதிகாரத்தை வழங்காமல் இருந்து வருகிறது.
எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் சந்தர்ப்பத்தில் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படுமாக இருந்தால் மக்கள் பிரயோசனமடைவார்கள்.
அரசியல்வாதிகளும் மக்களுக்கு பணிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த அதிகாரங்களை கோருகின்றார்கள்.
அரசியல்வாதிகள் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான இடைத்தரகர்கள் போன்று அங்குள்ள வேலைத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்ற மக்கள்பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.
எனவே தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகளவான அதிகாரங்களை வழங்கி இந்நாட்டின் பணிகளை துரிதமாக செய்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தற்போதைய தேசிய மக்கள் கட்சி ஆட்சியாளர்கள் செயற்பாட்டாளர்கள் பேசுவதை நாங்கள் காண்கின்றோம்.
ஆகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் முதலில் நடத்துவதற்கான வாய்ப்பு இந்த அரசாங்கத்தில் உள்ளது என்பதை அவர்களது செயற்பாட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்துள்ளார்.