இலங்கை தமிழரசுக் கட்சியின்
தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலேதான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தமிழரசுக் கட்சியின் ஊடக பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று காலை10.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இன்று இடம்பெற்ற கூட்டத்தில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி வாக்கெடுப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ.சுமந்திரன், “கட்சியின் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுந்தது.
மாவை சேனாதிராஜா கடந்த ஒக்டோபர் மாதத்திலே தனது பதவியை பதவி விலகல் செய்திருந்தார். அதன் பின்னர் இடம்பெற்ற அரசியல் குழு கூட்டத்தில் அது தொடர்பாக செயலாளர் அவரிடம் தெளிவுபடுத்துமாறு கோரியிருந்தார்.
இருப்பினும் அவர் அதற்கு பதில் கூறியிருக்கவில்லை. இதனால் செயலாளர் அவரது பதவி விலகல் நடைமுறைக்கு வந்ததாக எடுத்துக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக அவருக்கு அறிவித்திருக்கிறார்.
அதன் பின்னர் தனது பதவி விலகலை மீளப் பெறுவதாக அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளதாக காட்டப்படும் ஒரு கடிதம் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மூலம் செயலாளருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அதற்கு மறுநாள் மாவையும் செயலாளருக்கு அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார். எனவே அவர் பதவி விலகல் செய்திருப்பதால் கட்சியின் அடுத்த மகாநாடு வரைக்கும் எஞ்சியுள்ள காலத்துக்கு மத்திய செயற்குழு ஒருவரை தலைவராக நியமிக்க முடியும் என்ற எமது யாப்பின் அடிப்படையில் சி.வி.கே. சிவஞானத்தை அந்த பதவி நிலைக்கு நியமிக்குமாறு முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.
இதேவேளை சேனாதிராஜா தனது பதவி விலகலை மீளப் பெற்றிருக்கிறார் என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற மாற்று முன்மொழிவும் சொல்லப்பட்டது.
இதனால் குறித்த விடயம் தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. எனவே இந்த விடயத்தை வாக்கெடுப்புக்கு விடும்படியாக அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்ட தரப்பினர் கேட்டுக் கொண்டனர்.
இறுதியில் அது வாக்கெடுப்பில் தீர்மானிக்கப்படவுள்ளதுடன் அதற்காக இன்னொரு கூட்டத்தை கூட்டுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவர் யார் என்று தெரியாத ஒரு நிலையிலேதான் அடுத்த கூட்டம் வரைக்கும் கட்சி பயணிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.