கடும் மழையினால் ஏற்பட்ட
அனர்த்தங்களினால் 20 மாவட்டங்களில் 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
80,642 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலையம் கூறுகிறது.
யாழ்ப்பாணம், புத்தளம், கேகாலை, மன்னார், கிளிநொச்சி, இரத்தினபுரி, காலி, திருகோணமலை, பதுளை, மொனராகலை, முலத்தீவு, நுவரெலியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, மாத்தறை, மாத்தளை, அம்பாறை, வவுனியா, குருணாகல் மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் உள்ள 166 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு அனர்த்தங்களினால் 9 பேர் காயமடைந்துள்ளனர், 16 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் 882 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களில் 21,071 பேர் உறவினர்களின் வீடுகளிலும், 16,553 பேர் 183 முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 43,507 குடும்பங்களைச் சேர்ந்த 152,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று கனமழை...
இதேவேளை, தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (28) புயலாக உருவாகவுள்ளதாகவும் அதன் தாக்கம் காரணமாக இன்றும் 5 மாகாணங்கள் மற்றும் 2 மாவட்டங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று (27) முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலை கடற்கரையில் இருந்து கிழக்கே 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.
ஐந்து மாகாணங்களில் இன்று (28) 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேற்கு மற்றும் திருகோணமலை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (27) மாலை 6 மணியளவில், குருணாகல் மாவட்டத்தின் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவின் ஹதிரமுல்ல கிராம சேவையாளர் பகுதியில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அந்த பகுதியில் 202 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் அறிவிப்பு வரும்வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினரை கேட்டுக்கொண்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான காலநிலை நாளை (29)க்கு பின்னர் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.