ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடக்கு – கிழக்கு மாகாணங்களை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கு
உதவுமாறு கோரிக்கை விடுத்தபோதும், கொழும்பிலுள்ள சில திணைக்களங்களின் அதிகாரிகள் அவற்றுக்கு முட்டுகட்டைபோடும் விதத்தில் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக வங்கியின் இலங்கை நாட்டுக்கான செயற்பாட்டு முகாமையாளர் அபிட் கலி செயற்றிட்ட தலைவர் காயத்திரி சிங் உள்ளிட்ட உலக வங்கிக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (28) சந்தித்துக் கலந்துரையாடினர். இதில் ஆளுநர் உரையாற்றும்போது, கடந்த 3 தசாப்தங்களாக வடக்கு – கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டிருந்தன. இந்தக் காலப் பகுதியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு எந்தவொரு உதவிகளும் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் இங்கிருந்த உட்கட்டுமானங்களும் முழுமையாக அழிவடைந்திருந்தன.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி உலக வங்கியை வடக்கு – கிழக்கின் துரித அபிவிருத்தியில் கவனம் செலுத்துமாறு கோரியிருந்தார்.
அதற்கு அமைவாக உலக வங்கிக் குழுவினர் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களையும் பார்வையிட்டிருக்கின்றனர்.
அதற்கு அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். போரால் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கை ஒருபோதும் வந்து பார்வையிடாத அதிகாரிகள் சிலர் கொழும்பிலிருந்து கொண்டு உலக வங்கியின் திட்டங்கள் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு ஏன் வழங்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது.
அவர்களும் இங்கு வந்து நிலைமைகளைப் பார்வையிட்டால் எமது கோரிக்கைகளின் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்வார்கள்” என கூறியுள்ளார்.