(பாறுக் ஷிஹான்)
பாடசாலை மாணவர்கள்
உட்பட இளைஞர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருட்களை விற்பனை செய்தார் எனக் கூறப்படும் நபரை இரண்டாவது தடவையாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இன்று (20 ) அதிகாலை கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகத்துக் கிடமாக நடமாடிய குறித்த சந்தேக நபர் 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த சந்தேக நபர் ஏலவே கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொருவருடன் கல்முனை கடற்கரை பள்ளி வீதியில் வைத்து கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைதான சந்தேக நபர் கல்முனை குடி மதரஸா வீதியை வசிப்பிடமாக கொண்ட இரண்டு பிள்ளையின் தந்தை என்றும் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஐஸ் போதையுடன் ஏலவே அவர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரை இன்று கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டது.