(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
மன்னார் கட்டையடம்பன்
பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா மன்னார் வைத்தியசாலையில் மரணமடைந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொண்ட முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த நிலையில் விசாரணைகள் மந்த கதியில் இடம் பெற்றுள்ளமை நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை (19) மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்னரேயே குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இதுவரை காலமும் மன்னார் மடு பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையை B வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி டெனிஸ்வரன் மற்றும் சர்மிலன் டயசின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பான விசாரணை யை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்துக்குள் அறிக்கை சமர்பிக்குமாறும் வழக்கை B அறிக்கையாக தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 3 ஆம் திகதிக்கு தவணை இடப்பட்டுள்ளது.