இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்
தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாதமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று (01) ஆஜராகியதன் பின்னர், பிடியாணையை மீளப் பெற்று பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சார்பில் ஆஜரான சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, கடந்த 23ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது பிரதிவாதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கச் சென்றதாகக் குறிப்பிட்டார்.
இதன்படி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை ஜனவரி 27ஆம் திகக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வர்த்தக அமைச்சராக இருந்த காலத்தில் சதொச ஊழியர்கள் சிலரை உத்தியோகபூர்வ கடமைகளில் இருந்து நீக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அரசாங்கத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.