(மன்னார் நிருபர்)
மன்னார் நீதிமன்றத்தில்
நடைபெறும் வழக்கு விசாரணையின்போது இன்றைய தினம் (30) முன்னிலை யாகாத சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையினுள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயற்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் வழக்கு விசாரணைகள் இன்று புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. மேலும் இரண்டு பிணைதாரர்களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பிணையாளி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலை யாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.