2024 உயர்தரப் பரீட்சை தொடர்பான
அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய (30) விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பரீட்சைகள் ஆணையாளர் 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த பரீட்சை ஆணையாளர், உயர்தரப் பரீட்சை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல தவறான செய்திகள் வெளியாவதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து உயர்தரப் பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் மாணவர்கள் மத்தியில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்ட நிலையில் அதனை சரி செய்வதற்காக ஊடகவியலாளர் சந்திப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் எப்போதும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என்றும் பரீட்சை ஆணையாளர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் மிக விரைவில் பரீட்சார்த்திகளிடம் கையளிக்கப்படவுள்ளன என்றார்
இதற்கிடையில், பல மாணவர்களிடமிருந்து பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு தனக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் கோரிக்கைகள் வந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் காரணமாக மிகவும் சீரற்ற முறையில் பரீட்சைகளை நடாத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர், 2025ஆம் ஆண்டின் இறுதியில் பரீட்சைகளை முறையாக நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.