(பாறுக் ஷிஹான்)
கல்முனை காவலன் என்று
ஹரீஸை மட்டும் சொல்ல முடியாது. அவர்தான் வடக்கு பிரதேச செயலகத்தை தர முயர்த்த விரும்பாதவர் என்றும் கூற முடியாது. ஆனால் அவருக்காக வாக்களிக்கின்றவர்களும் குறித்த பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விரும்பாதவர்கள் என்றே கூற முடியும்.
இதேவேளை, முன்னாள் எம்.பியான ஹரீஸூக்கு அவரது கட்சி இம்முறை இத்தேர்தலில் வேட்புமனு கொடுக்காமைக்கு காரணம் தற்போதைய ஜனாதிபதியின் செயற்பாடாகவும் இருக்கக் கூடும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் கல்முனை ஐக்கிய வணிக சங்கத் தலைவரும் பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் அம்பாறை ஊடக அமையத்தில் வியாழக்கிழமை(24) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் போராடுவதற்கு ஆர்வமுள்ளவர்கள் இதயசுத்தியுடன் போராடாமல் இருந்தால் அச்செயலகத்துககுரிய அதிகாரத்தை பெற முடியாது என்பது உண்மை.
மேலும் இலங்கை தமிழரசுக் கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் திருமணம் முடித்து வேறு கள்ளக்காதலில் ஈடுபட்ட நிலையில், அம்பாறை மாவட்ட கல்முனை தமிழ் மக்களது வாக்குகளை பெறுவதற்காக பிச்சைக்காரனின் புண்ணாக இவ்விடயத்தை பயன்படுத்துகின்றனர்.எனவே அம்பாறை மாவட்ட வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.
1995 க்கு பின்னர் பிறந்த எமது இளைஞர்கள் இம்முறை தேசிய அரசியலின் பக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.இது ஏனைய மாவட்டங்களுக்கு அல்லது ஏனைய இனங்களுக்கு பொருந்தலாம். ஆனால் அம்பாறை மாவட்ட தமிழ் வாலிப வாக்காளர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது.அவர்கள் சிந்திக்க வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி ஒருவேளை மூன்று ஆசனங்கள் எடுத்தாலும் அம்பாறை மாவட்டத்தில் அந்த அணியில் கேட்கின்ற தமிழர் ஒரு போதும் வரவே முடியாது .அப்படி வந்தாலும் அவரால் தமிழருக்காக குரல் கொடுக்கவும் முடியாது. அபிவிருத்தி செய்யவும் முடியாது.
எனவே அவர்களுக்கு அளிக்கும் உங்களது வாக்குகள் தமிழ் மகனை வெற்றியடையச் செய்யப் போவதில்லை. மாறாக மாற்றின பிரதிநிதியைத்தான் வரவைக்கும் என்பதை தமிழ் வாலிப வாக்காளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் .
எனவே பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வெற்றி பெறும் அணிக்கு வாக்களித்து தமிழ் பிரதிநிதி வர ஒத்துழைப்பு நல்குங்கள்.
கடந்த முறை தமிழ் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்தில் இழக்கப்பட்டதற்கு கருணா காரணம் இல்லை .கூட வாக்கெடுப்பதை விட குறைவாக வாக்கெடுத்து வாக்குகளை பிரிப்பவன் தான் அதற்கு காரணமாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் 1994 ஆம் ஆண்டிலே மாவை சேனாதிராசா இங்கு வந்து பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தார். இதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் .
நாங்கள் திருகோணமலை மாவட்டத்திலே சம்பந்தன் பிறந்த நகர் என்பதால் அங்கு வீட்டுக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால் அம்பாறை மாவட்டத்தில் அவர்கள் தேவையற்ற சாட்டுகளை சொல்லி ஒற்றுமையில் இருந்து தவறி விட்டார்கள். அதன் விளைவாக நாங்கள் சங்குச் சின்னத்தில் கேட்க நிர்ப்பந்திக்கப்பட்டோம் .கடந்த காலங்களில் இந் தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு செய்த துரோகம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை.
2015இல் கிழக்கு மாகாண சபையை தாரை வார்த்து கொடுத்தது.2019ல் நாம் உண்ணாவிரதம் இருந்த போது எத்தனையோ பொன்னான வாய்ப்புகள் இருந்தும் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை வேண்டும் என்று கிடப்பில் போட்டது.இவை எல்லாம் வரலாற்றில் அழிக்க முடியாத துரோகங்கள் .இன்று அவர்கள் புனிதர்களாக வலம் வருவதாக கூறுகிறார்கள் .புதிய அரசாங்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று செயற்பட்டு வருகின்றது. அதைத்தான் நானும் விரும்புகிறேன் என்றார்.