நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்
தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நவம்பர் 4ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனு இன்று (24) உயர் நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
ஆட்சேபனை இருப்பின் நவம்பர் 1ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் இலங்கை தேசிய அமைப்பின்" அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10ஆவது பிரிவின்படி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான திகதி அக்டோபர் 4 முதல் அக்டோபர் 11 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மனுதாரர் கூறுகிறார்.
தேர்தல்கள் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாத மற்றும் ஏழு வாரங்களுக்கு அதிகமில்லாத காலப்பகுதிக்குள் வாக்குப்பதிவுக்கான திகதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, வேட்புமனு ஏற்கும் பணி முடிவடைந்த அக்டோபர் 11ஆம் திகதி முதல் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும் ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியும் நிறைவடையும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டபூர்வ காலத்திற்குள் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்துக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.