(பாறுக் ஷிஹான்)
கல்முனை பிரதேச செயலகத்தை
உட்பட்ட பெரியநீலாவனையில் ஏற்கனவே ஒரு மதுபானசாலை உள்ள நிலையில் மீண்டும் புதிதாக ஒரு மதுபானசாலை திறந்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் இணைந்து அஹிம்சை வழி ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
பாடசாலைமாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக அமையவுள்ள மதுபானசாலையை பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் இதனைக் கவனத்தில் கொண்டு தடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
ஏற்கனவே ஒரு மதுபானசாலை நீண்ட நாட்களாக உள்ள நிலையில் புதிதாக ஒரு மதுபானசாலை இங்கு அவசியம் இல்லை எனவும், சிறிய கிராமமான இத்தக் கிராமத்துக்கு இரு மதுபானசாலை தேவையில்லை எனவும் இது எங்கள் சமூகத்தை சீரழிக்கவே ஆரம்பித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரித்தான உன்னிச்சை என்ற விலாசம் கொண்ட லேபல் பொறிக்கப்பட்ட மதுபானசாலையாக இது அம்பாரை மாவட்டத்தில் இயங்குவதாகவும் ஆர்ப்பாட்டதாரர்கள் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன்போது அங்குவருகை தந்த கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே.அதிசயராஜ் குறித்த மதுபான சாலை உரிமையாளரிடம் தற்காலிகமாக மூடுமாறும் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறும் மதுபான சாலையை அகற்றுவதற்கான நடவடிக்கையை மதுவரி திணைக்களத்துடன் கலந்துரையாடி மேற்கொள்வதாகவும் உறுதியளித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர் .