முல்லைத்தீவில், இராணுவத்தினரின் தாக்குதல்களுக்கு உள்ளான தமிழ் இளைஞர்கள் விடயத்தை மையப்படுத்தி, எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று
இலங்கைத் தமிழரசுக் கட்சியானால் முன்னெடுக்கப்படவுள்ள முழுக் கடையடைப்புப் போராட்டத்தைத் தாம் ஆதரிப்பதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரவித்துள்ளார். ஷ
அத்துடன், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஹர்த்தாலை, ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுர குமார திசாநாயக்க, குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள மனோ எம்.பி, இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஐந்து தமிழ் இளைஞர்கள், 8ம் திகதி முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பி சென்றவர்களில் ஒருவரான, கபில் ராஜ், 9ம் திகதி, முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தப்பி சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல.
“இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் .
“ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்கு உரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும். எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும்.
“இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க மூட வேண்டும். “அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதேயே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம்.
“அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் ஆதரவு
முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக மேற்கொள்ளப்படும் ‘கதவடைப்பு’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் 2025 எதிர்வரும் 15ம் திகதி, வெள்ளிக்கிழமை ‘கதவடைப்பு’ போராட்டம் அனுசரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கையில், 'கடந்த 7 ஆம் திகதியன்று, முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.
நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த கதவடைப்பு போராட்டத்திற்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன்.
யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்துகின்றேன்.'என தெரிவிக்கப்பட்டுள்ளது.