தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான எழுத்து மூல கோரிக்கை நேற்று (01) பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உயிருக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபான இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல் காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வௌியானது.
இவ்வாறான சூழலில் தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு வழங்கிய அதிகாரிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
தேசபந்து தென்னகோனின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க பொலிஸாரினால் பாதுகாப்பு மதிப்பாய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கவுள்ளதாகவும், அதன் ஊடாக அவருக்குப் பாதுகாப்பு வழங்க பரிந்துரைக்கப்பட்டால், பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பாதாள உலகக் கும்பல் தலைவர் கஞ்சிபான இம்ரானிடமிருந்து அச்சுறுத்தல்கள் வரக்கூடும் என பொலிஸ் உயர் அதிகாரிகள் இருவர் நேற்று (01) அறிவித்தனர்.
ஹோகந்தரவில் உள்ள தேசபந்து தென்னகோனின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்த பின்னர் இதனைத் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள கஞ்சிபானி இம்ரான், தேசபந்து தென்னகோனை கொலை செய்ய தனது நெருங்கிய உதவியாளர்களுக்கு அறிவுறுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
பதவி சார்ந்த கடமைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக அவரது உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பிலான தகவல்கள் அடங்கிய புலனாய்வு அறிக்கை பொலிஸ் தலைமையகத்திடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'யுக்திய' உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பாதாள உலகக் கும்பலையும் போதைப்பொருள் கடத்தலையும் ஒழிப்பதற்காக அவர் முன்னெடுத்த முயற்சிகள் காரணமாக, ஏனைய பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களிடமிருந்தும் கொலை மிரட்டல்கள் வரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.