தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமைக்காக தவறான தகவல்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரவையின் கூட்டு நம்பிக்கையை மீறியுள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (29) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் அறிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அப்போதைய அமைச்சரவையின் அமைச்சர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் ஊடாக இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் தெரிவித்தார்.
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்வது தொடர்பான விசாரணை நேற்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் மீள அழைக்கப்பட்டது.
இதன்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் சுதத் ஜானக பெர்னாண்டோ மற்றும் பிணையில் வெளியில் உள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்படலான 10 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலையாகினர்.