(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
மன்னாரில் வாக்காளர்களுக்கு
அரசியல் கட்சி ஒன்றினால் வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் இன்று புதன்கிழமை (13) மாலை மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரினால் வாகனம் ஒன்றில் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மன்னார்-யாழ் பிரதான வீதியில் வைத்து வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது குறித்த வாகனத்தில் ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் காணப்பட்டன.
இதன்போது பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போது குறித்த உலர் உணவு பொருட்கள் அரசியல் கட்சி ஒன்றினால் வாக்காளர்களுக்கு வழங்க கொண்டு வரப்பட்டமை தெரிய வந்தது.
இந்த நிலையில் குறித்த பொருட்களை பொலிஸார் அடம்பன் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதுடன் வாகனத்தின் சாரதி, உதவியாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வாகனத்தில் சுமார் 290 நபர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்ட 5 கிலோ அரிசி பக்கெற்கள், 2 கிலோ மா,1 கிலோ சீனி,20 கிராம் ரின்சோ பக்கெற் 5 வீதம் தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பொருட்கள் 6 இலட்சத்து 13 ஆயிரத்து 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அடம்பன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.