உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
தொடர்பில் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான காணொளி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெளி அமைப்பு ஒன்றினால் காணொளி தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4, ஆசாத் மௌலானா என்ற இலங்கையரான மொஹமட் மிஹிலால் மொஹமட் ஹப்சிருடன் நேர்காணல் ஒன்றை நடத்தியது.
இந்த நேர்காணல் செப்டம்பர் 6, 2023 அன்று அல்லது அதற்கு அண்மித்த தினம் ஒன்றில் செனல் 4 இல் ஒளிபரப்பப்பட்டது, பின்னர் அந்த வீடியோ அகற்றப்பட்டது.
எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வீடியோவில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் மற்றும் குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சதி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விசாரணை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று (11) கோட்டை நீதிவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்தது.
இதேவேளை, நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி இன்று காலை 9.30 மணியளவில் பிள்ளையான் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.