வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பொதுக்கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் ரிஷாத. பதியுதீன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயணித்த வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் இன்று (11) இரவு 8 மணியளவில் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் பொதுக்கூட்டத்தை நோக்கிகூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.
சற்று நேரத்தில் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள் கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதிக்கு வந்தன.
இதனால் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டு முதலாக மாறியது.
இதன்போது ரிஷாத் பதியுதீனின் வாகனத் தொடரணி தாக்கப்பட்டது. அவர் வாகனத்துக்குள் இருந்த நிலையில் அவரது வாகனம் சேதமாக்கப்பட்டதுடன் அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் தாக்கப்பட்டது. குறித்த தாக்குதலையடுத்து அந்த வாகனத்தொடரணி அந்தப் பகுதியில் நிறுத்தாமல் வேகமாக சென்றது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தனர். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை இவ்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்த புலவு பகுதியில் இடம்பெற்ற மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிலமை கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் தொடர்ந்தது