கடந்த ஜனாதிபதி தேர்தலில்
புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத் தந்ததைப் போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதி செய்கிறது.
புத்தளம் மாவட்டத்தில் இருந்து இதுவரை தெரிவு செய்து அனுப்பிய உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பலவந்தமாக காணிகளை கைப்பற்றுதல்,போதைப்பொருள் வியாபாரம் செய்தல், தங்கக் கடத்தலில் ஈடுபடுதல், கப்பம் பெறுதல், பலவந்தமாக இறால் பண்ணைகளை கைப்பற்றுதல் போன்றவற்றில் ஈடுபடும் உறுப்பினர்களுக்குப் பதிலாக மக்களுடன் தோள்கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்பகின்ற புதிய கலாசாரத்தைக்கொண்ட உறுப்பினர்களை புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள்.
அதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தியின் அணி மாத்திரமே. பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது பொதுவில் நிலவுகின்ற எதிர்ப்பினை முடிவுறுத்தி பாராளுமன்றத்தை துப்பரவாக்குகின்ற பாரிய சிரமதானத்திற்காக திசைகாட்டியிலிருந்து அதிகமான எண்ணிக்கை கொண்ட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இவ்வாறு புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
நாங்கள் அவ்வாறு கூறும்போது திசைகாட்டி வேட்பாளர்களின் முகங்கள்கூட தெரியாதென ஒருசிலர் கூறுகிறார்கள். எனினும் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு முழுநாட்டிலுமே பிரபல்யமடைந்துள்ள குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பதிலாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திசைகாட்டியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை உருவாக்க செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உலகில் இருக்கின்ற மிகச்சிறிய அமைச்சரவையை முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகளை உணர்கிறீர்களா? அவ்வாறான குறைபாடு கிடையாது. ஒரு பட்டாசுகூட கொளுத்தாமல் வெற்றியைக் கொண்டாடியதன் மூலமாக வெளிப்படுத்திய எடுத்துக்காட்டை இந்த பொதுத்தேர்தலிலும் தேர்தல் இயக்கத்தில் பாதுகாத்து வருகிறோம்.
அரசியலை வெறுத்திருந்த இளைஞர் தலைமுறையினரை முதன்மையாகக் கொண்ட மக்கள் புதிய உணர்வுடன் நாடு பூராவிலும் அரசியலில் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். தேர்தலின் பின்னர் விஞ்ஞானரீதியான அடிப்படையில் இருபத்தைந்து பேருக்கு குறைவான அமைச்சரவையை நியமித்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அமுலாக்குவோம்.
மத்தியக் கிழக்கில் உருவாகியுள்ள யுத்த முரண்பாட்டின் தாக்கம் உலகம் பூராவிலும் பரவிவருவதோடு இலங்கை மீதும் ஒரு சில அபாய நிலைமைகள் வந்துள்ளன. அவற்றில் ஏதேனுமொரு சம்பவம் இலங்கையிலும் ஏற்படக் கூடுமென்ற தகவல் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் எமக்கு கிடைத்தது.
நாங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் பாதுகாப்பை வேகமாக உறுதிசெய்தோம். உளவுப் பிரிவுத் தகவல்கள் பதிவாகின்றபோது நாங்கள் ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதில்லை. அந்த தகவல்களுக்கு நேரொத்தவகையில் பொறுப்புடன் செயலாற்றுவோம். பொறுப்புடைமயவர்களாக பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வோம்.
அதேபோலவே உளவுப்பிரிவுத் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுகளை துரிதமாக நடாத்தி ஒருசில சந்தேக நபர்களைக் கைது செய்தோம். எனினும் செய்திகளை வெளியிடுவதையோ ஊடக கலந்துரையாடல்களை நடத்துவதையோ செய்யவில்லை. ஒரு அரசாங்கம் என்றவகையில் எமது பொறுப்பு அவ்வாறான சம்பவங்களை தடுப்பதாகும். முன்னர் செய்தது அவ்வாறான உளவுத் தகவல்களை பொருட்படுத்தாமல் விடுவது அல்லது ஊடகங்களுக்கு அறிவித்து பதற்றத்தை உருவாக்குவதாகும்.
மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலீஸாருடனும் பாதுகாப்பு பிரிவுகளுடனும் மிகவும் நெருக்கமாக கவனஞ்செலுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமாகவும் ஒருசிலர் கலவரமடைந்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பொறுப்புடன் இயங்கிவருகின்ற அரசாங்கமொன்றின் செயற்பொறுப்பாகும்.
பொருளாதாரரீதியாக, பாதுகாப்புரீதியாக, தொழில்முயற்சிகளை முன்னேற்றுகின்ற பக்கத்தில், பிள்ளைகளின் கல்விப் பக்கத்தில் போன்றே உழைக்கும் மக்களின் பக்கத்தில் அனைவரையும் பேணிப்பாதுகாக்கவேண்டியது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நாங்கள் ஈடேற்றிக்கொண்டிருக்கிறோம் என்றார்.